தங்க ஜூவலரி துபாராமய தாதுகோபுரம்

(Thuparamaya Dagaba)


தங்கத்தால் ஆன ஜூவலரி என்ற பெயரால் இலங்கையில் உள்ள ஒரு தாது கோபுரம் வர்ணிக்கப்படு கின்றது. அது எந்த தாதுக்கோபுரம் என தெரியுமா? 

இலங்கையின் வரலாற்றில் முதல் தாது கோபுரம் என்ற பெருமை கொண்ட தூபாராமய  தாதுகோபுரமே அது. நம் நாட்டின் பண்டையக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். அசோகப் பேரரசரின் மகனும் பௌத்த துறவியுமான மஹிந்த தேரர் இலங்கையில் தேரவாத புத்த சமயத்தையும், அது சார்ந்த விகாரை வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய வேண்டுகோளின்படி அக்காலத்தில் இலங்கை ஆண்ட தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கி.மு 250 - 210 காலப்பகுதியில் கட்டப்பட்டதே தூபாராமய என்னும் இந்தத் தாதுகோபுரம். மகிந்த தேரரினால் செட்டியா  என்ற கட்டிட வியூகத்திற்கமைய 4 வருட கடின உழைப்பிற்கு பின்னர் உருவானதுதான் தூபாராமய.

 இன்று எண்ணற்ற பிக்குகளும்,பக்தர்களும் சென்று வழிபாடு செய்ய உதவியாக இவ்     வியூகமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டப்பட்ட முதல் தாதுகோபுரம் இதுவே எனக் கருதப்படுகின்றது.
அனுராதபுர நகரில் இருந்து 1.9 கிலோமீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது இத் தாது கோபுரம். நெற்குவியலின் வடிவில் அமையப்பெற்ற தூபாராமய காலத்துக்குக் காலம் அழிவுக்கு உட்பட்டது. ஏறக்குறைய 3.5 ஏக்கர் நிரப்பரப்பிற்குள் அமையப்பெற்ற இத் தாது கோபுரம் சுற்றி 176 தூண்களுடன் காட்சியளித்தது என வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள வட்டதாகே முதலாம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின்னர் 7ஆம் நூற்றாண்டில் தங்கம், வெள்ளியினால் வட்டதாகே முலாமிடப்பட்டது. அத்தோடு செங்கற்களுக்கு தங்க முலாம் இடப்பட்டு கதவுகள் செய்யப்பட்டுள்ளது. தென் இந்திய வரலாற்று ஆசிரியரான பாண்டியன் தூபாராமயவை தங்கத்தால் ஆனா ஜூவலரி என வர்ணனை செய்துள்ளார். அத்தோடு இவ் வட்டதாகே ஆங்கிலேயரினால் ஸ்தூபா ஹவுஸ் என இன்றும் அழைக்கப்படுகின்றது .



10 ஆம் நூற்றாண்டில் (கி.பி 956 - 972 ) காலப்பகுதியில் 5ஆம் மகிந்தன் மன்னன் காலப்பகுதியில் வட்டதாகே கதவுகள் புனரமைக்கப்பட்டு தங்க மூலாமிட்டு மீள பொருத்தப்பட்டது. இதற்கு பின்னர் முற்றாகவே அழிவுக்கு உள்ளான தூபாராமய தாது கோபுரம் இரண்டாம் அக்கபோதி மன்னன் காலத்தில் புனரமைக்கப்பட்டதுடன் இன்றுவரை வரலாற்று சின்னமான எஞ்சியுள்ள தாதுகோபுர எச்சங்கள் அக்கபோதி மன்னனின் பெயரை சொல்லிக்கொண்டுள்ளது. 1862ஆம் ஆண்டில் மீளமைப்புக் கட்டுமானம் செய்யப்பட்ட இத் தாதுகோபுரத்தின் அடிப்பகுதியின் 18 மீற்றர் விட்டம் கொண்டதும், 50.1 மீற்றர் உயரம் கொண்டதுமான வட்ட வடிவமான மேடையொன்றும் அமைக்கப்பட்டது. அதனுடன் இணைந்த வாரே நிலத்திலிருந்து மேடைக்குச் செல்ல நாற்புறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் தாதுகோபுரத்தைச் சுற்றி இரண்டு வட்ட வடிவ வரிசைகளில் கல் தூண்கள் காணப்படுகின்றன. 

இத் தூண்கள் ஆரம்ப காலத்தில் தாதுகோபுரத்தை மூடிக்கட்டப்பட்டிருந்த வட்டதாகேக்குரியது என்பதற்கு சான்றுகளும் உள்ளது. முன்பு அமைக்கப்பட்ட வட்டதாகேக்கு மரத்தாலான கூரை இடப்பட்டிருந்ததாகவும் காலப்போக்கில் அழிந்து விட்டதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமான இத் தூபி ருவன்வெலிசாய, ஜேதவனராமய இத்தோடு சேர்த்து சிறப்பு பெரும் ஒரு தூபியாக இது உள்ளது.

Comments